நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளில் , உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புக்களை பாஜக இழந்திருக்கிறது. பாஜக தொண்டர்களுக்கு இந்த மாநிலங்களின் முடிவுகள் அதிர்ச்சியைத் தந்திருக்கின்றன. பாஜகவின் வாக்குகள் எங்கே? ஏன் குறைந்தது? என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்த நிலையில் முதலில் அந்த கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜி, திடீரென, மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
அதன்படியே தனித்து போட்டியிட்டார். காங்கிரசும், சிபிஎம்மும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கும், மம்தாவின் திரிணாமூல் காங்கிரசுக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவியது.
மொத்தமுள்ள 42 நாடாளுமன்றத் தொகுதிகளில், முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
2019 ஆம் ஆண்டு தேர்தலில்,18 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்தமுறை அதில் 6 இடங்கள் குறைந்து 12 இடங்களையே பெற்றுள்ளது. என்றாலும் பாஜகவுக்கு 38 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
மேற்கு வங்கத்தில் தெற்கு பகுதிகளில் உள்ள தொகுதிகள் உட்பட கொல்கத்தாவை சுற்றியுள்ள மேற்கு வங்க தொகுதிகளிலும், மம்தா தனது வெற்றியை உறுதிப்படுத்திருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் பாஜக வலிமையாக இருக்கும் வடக்கு மேற்கு வங்கத்திலும் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு வங்கத்தில் மீண்டும் தடம் பதித்த திரிணாமூல் காங்கிரஸ் இம்முறை பல தொகுதிகளை பாஜகவிடம் இருந்து எடுத்துக்கொண்டது.
கூச் பெஹர் தொகுதியில் 39,250 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அமைச்சர் நிசித் பிரமானிக்கை, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா தோற்கடித்திருக்கிறார்.
இது போல தெற்கு வங்கத்திலும் பர்தமான்-துர்காபூர், ஹூக்ளி, மேதினிபூர் மற்றும் பாரக்பூர் ஆகிய இடங்களை பாஜகவிடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் பறித்துக் கொண்டது.
பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த ஜங்கல்மஹால் பகுதியில் இருக்கும் ஜார்கிராம், பாங்குரா, பிஷ்ணுபூர், புருலியா ஆகிய 4 தொகுதிகளையும் 2019 ஆம் ஆண்டு பாஜக வென்றது. ஆனால் இந்த முறை பிஷ்ணுபூரை மட்டுமே பாஜகவால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. மீதமுள்ள தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்தது.
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு இந்த அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு , மம்தாவின் பிரச்சார வியூகமே காரணம் என்று கூறப்படுகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று அழுத்தம் திருத்தமாக மம்தா செய்த பிரச்சாரம் மேற்குவங்க மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனது சிறுபான்மை வாக்கு அரசியலை மிக கச்சிதமாக மம்தா தேர்தலில் பயன்படுத்தி, மக்களுக்கு பாஜக மீது ஒரு வெறுப்பு ஏற்பட வைத்து, அதை தனக்கான வாக்குகளாக மாற்றிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ,பாஜகவின் இந்துத்துவா பிரச்சாரம் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க உதவவில்லை என்றும், அதற்கு மாறாக மம்தா பானர்ஜிக்கு பின்னால் இஸ்லாமிய வாக்குகளை ஒன்றாக சேர்த்து விட்டது என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த சாகர்டிகி சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு சிறுபான்மை வாக்குகள் தமக்கு வராதோ என்று கவலை பட்டிருந்த மம்தாவுக்கு எதிர்பாராத திருப்பமாக சிறுபான்மை வாக்குகள் இந்தமுறை வந்து குவிந்து விட்டன .
மாநிலம் முழுவதும் சிறுபான்மை வாக்கு வங்கியைச் சாதகமாக மம்தா பயன்படுத்தி கொண்டார்.
அதனாலேயே, சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பஹரம்பூர் தொகுதியில், 1999 ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரிக்கு எதிராக, முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை நிறுத்தி மம்தாவால் அவரை வெற்றிபெற செய்ய முடிந்தது. யூசுப் பதானுக்கு இது முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.