சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து, அவரது தாய் கமலா தொடர்ந்த வழக்கு மீண்டும் இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனு, மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இந்த வழக்கில், இரு நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்” எனவும், “தற்போது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதால், இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை முழுமையானதாக கருத முடியாது” என்றும் தெரிவித்தார்.
“ஆட்கொணர்வு மனுக்களை, சட்டப்படி இரு நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும்” என்றும், “குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமானால், அதிகாரிகள் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டார்.
“ஆட்கொணர்வு மனுக்கள் 2 மாதங்களில் முடித்துவைக்க வேண்டும் என்பது தொடர்பாக பொறுப்பு தலைமை நீதிபதி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” எனவும், இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உதவியாக ஜூன் 12 ம் தேதி பட்டியலிட வேண்டும்” என்றும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், சவுக்கு சங்கருக்கு எதிராக, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.