நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேவைப்பட்டால், சில தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மொத்தமுள்ள 4,750 தேர்வு மையங்களில், வெறும் ஆறு மையங்களில் மட்டுமே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் ஆயிரத்து 600 மாணவர்கள் அசெளகரியத்தை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால், மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களும் முழு மதிப்பெண்கள் பெற்றதாக அவர் கூறினார்.
மேலும் முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலை மறுத்த சுபோத் குமார், NCERT புத்தகத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் நேரமிழப்பால் வழங்கிய கருணை மதிப்பெண்ணால்தான் ஏராளமானோர் அதிக மதிப்பெண்கள் பெற நேர்ந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்தப் பிரச்சினையால் மருத்துவ மாணவர் சேர்க்கை பாதிக்காது என்றும் தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவானது, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தேர்வுகள் முகமை பொதுச் செயலர் சுபோத் குமார் சிங் கூறியுள்ளார்.