தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முதல் போகத்திற்கான நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
லோயர்கேம்ப்பில் இருந்து பழனிசெட்டிப்பட்டி வரை உள்ள 14 ஆயிரத்து 700 ஏக்கர் ஆயக்கட்டு பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
இங்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கும் நீர் மூலமாக இரு போக நெல்சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம் போல், ஜூன் 1 -ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்க ஆரம்பித்தனர். குறிப்பாக, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் நெல் நடவுப் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.