கேரள மாநிலம் இடுக்கி அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின் போது, மண் சரிவில் சிக்கிய 2 தமிழக தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அடிமாலி பகுதியில், கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதில் மண்சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்புசுவர் அமைக்கும் பணியில், தென்காசியை சேர்ந்த காளிசாமி மற்றும் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜோஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் இருவரும் மண்ணில் புதைந்தனர். இதனையடுத்து மண் அள்ளும் இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் இருவரும் மீட்கப்பட்டு, அடிமாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல், கண்ணூர் மாவட்டம் முத்தோலம்பாறை பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பாலத்திற்கான கான்கிரீட் பில்லர்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, அருகில் உள்ள ஷீபா என்பவரது வீடு விரிசல் ஏற்பட்டு சரிந்து விழுந்தது.
இதேபோல், உபேந்திரன் என்பவரின் வீட்டின் மதில்சுவர் இடிந்து விழுந்த நிலையில், தற்போது வீடும் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது.