ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் மஜி பதவியேற்றுக் கொண்டார்.
ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து, ஒடிசா சட்டப் பேரவைக் குழு பாஜக தலைவராக நான்கு முறை எம்எல்ஏ-வான மோகன் சரண் மஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸை சந்தித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். அந்தவகையில் புவனேஸ்வரின் ஜந்தா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மோகன் சரண் மஜிக்கு ஆளுநர் ரகுவர் தாஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
அப்போது மோகன் சரண் மஜியை, பிரதமர் மோடி ஆரத்தழுவி பூங்கொத்துக் கொடுத்து, வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், துணை முதல்வர்களாக கனக் வர்தன் சிங் தியோ, பிரவதி பரிதா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். சுரேஷ் புஜாரி, ரவிநாராயண் நாயக், நித்யானந்த் கோண்ட், கிருஷ்ண சந்திர பத்ரா உள்ளிட்ட 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.