இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசி சந்தையில் ஏற்கெனவே, ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் காலூன்றி உள்ள நிலையில், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கும் இணையவிருக்கிறார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சாட் காம் எனப்படும் சாட்டிலைட் தகவல் தொடர்பு சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது, 2.23 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த சந்தை அடுத்த 5 ஆண்டுகளில் 5.71 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய வர்த்தகமாக இருக்கும் இந்த சாட்டிலைட் தகவல் தொடர்பு சாட் காம், வியாபாரத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரத் ஏர்டெல் நிறுவனங்கள், அரசின் அனுமதியை பெற்றுவிட்டன. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது , அவரை நேரில் சந்தித்த எலான் மஸ்க், இந்தியாவில் தனது ஸ்டார் லிங்க் சாட் காம் சேவையை வழங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் , இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாக தெரிவித்த , டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ,கடைசி நேரத்தில் தன் இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டு , சீனாவுக்கு சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.
எலான் மஸ்க் கின் ஸ்டார் லிங்க் சாட் காம் சேவைக்கு இந்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாட் காம் சேவைகள் வழங்குவதற்கான மத்திய அரசின் முழு அனுமதிகளையும் பெற்றிருக்கும் சுனில் மிட்டலின் பாரத் ஏர்டெல் நிறுவனம், வரும் ஜூன் மாதம் தனது சேவைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், இந்திய ராணுவத் துறை சார்ந்த பணிகளுக்கு வழக்கமான பிராட்பேண்ட் சேவைகள் இல்லாமல் இருக்கும் மலைப் பகுதிகள்,கடற்பகுதிகள் மற்றும் மிகவும் தொலைதூரப் பகுதிகளில் சாட்டிலைட் தகவல் தொடர்பு மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கவும் பாரதி ஏர்டெல் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சாட் காம் சேவைகளை வழங்க, மத்திய அரசின் விண்வெளித் துறையின் IN-SPACe இன் அனுமதிக்காக காத்திருக்கிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள், ரிலையன்ஸ் ஜியோவும் சாட் காம் சேவைகளை வழங்க தொடங்கும் என்று, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றுக்கு போட்டியாக , எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சாட் காம் இந்தியாவுக்கு வருவது சுனில் மிட்டல், மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவருக்கும் கடும் சந்தை போட்டியை ஏற்படுத்தும் எனக் கூறப் படுகிறது.
எலான் மஸ்க் , சுமார் 6000 க்கும் மேற்பட்ட சொந்த சிறு செயற்கை கோள்களை பூமியின் குறைந்த தூர சுற்றுப்பாதையில் நிறுத்தியிருக்கிறார் . மேலும் வரும் ஆண்டுகளில் மேலும் 6000 செயற்கை கோள்களை விண்ணில் நிறுத்த எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் திட்டமிட்டுள்ளது. எனவே, எலான் மஸ்குடன் போட்டியிடுவது சுனில் மிட்டல், மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவருக்கும் சிரமமாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
2022ம் ஆண்டு சாட் காம் சேவை அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த, எலான் மஸ்க் கின் நிறுவனம், அதற்கு முந்தைய ஆண்டே , இந்திய சந்தாதாரர்களிடம் முன் கூட்டியே சேவைகளுக்கான கட்டணத்தைப் பெற முயன்றதாக ஒரு குற்றச்சாட்டில் சிக்கி கொண்டது.
இந்த குற்றச்சாட்டின் காரணமாக, அப்போதைய, ஸ்டார்லிங்கின் இந்தியப் பிரிவின் செயல் தலைவர் சஞ்சய் பார்கவா பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒருவேளை இந்திய அரசிடம் இருந்து அனைத்து உரிமங்களையும் பெற்றாலும் கூட எலான் மஸ்க்கிற்கு மற்றொரு சிக்கலும் இருக்கிறது. 4G மற்றும் 5G சேவையை எலான் மஸ்க்கால் பெற முடியாது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
அதற்காக, மத்திய அரசின் Dot உரிமம் பெற்று வைத்திருக்கும் பாரத் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிடம் தான் எலான் மஸ்க் ஒப்பந்தம் போட வேண்டிவரும் . ஆனால் அதற்கும் சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, பாரத் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவும் , வேறு வேறு செயற்கை கோள் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் நிலையில் எலான் மஸ்க்கால் இதை சமாளிக்க முடியாது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய இன்டர்நெட் சந்தாதார்கள் கொண்ட நாடான இந்தியாவில் சாட் காம் சந்தையில், சுனில் மிட்டலும் , முகேஷ் அம்பானியும் அசுர பலத்துடன் இருக்கும் போது எலான் மஸ்க் , இந்திய சாட் காம் சந்தையில் எப்படி மீன் பிடிக்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.