உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகு, பாகிஸ்தான் அணிக்கு மூளை செயல்பாட்டு திறன் பரிசோதனை செய்ய வேண்டும் என விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்….!
ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம், பிளாக் பஸ்டர் சண்டேயில் நடந்தது.
இதில், பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை ருசித்தது இந்திய அணி. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 8 முறை விளையாடி, ஒருமுறை கூட தோற்கடிக்கப்படவில்லை என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. அதே போல தான் டி20 உலகக் கோப்பை தொடரும்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் குவித்தது. 120 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் போராடி தோல்வியை தழுவியது.
120 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதுமே 10 முதல் 14 ஓவர்களுக்குள் அடித்து முடித்து விடுவார்கள் என நினைக்கபட்ட பாகிஸ்தான், 20 ஓவர்களும் விளையாடி 6 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபகரமாக தோல்வியை தழுவிய சம்பவம் தான் தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், இந்திய அணியே இந்த மைதானத்தில் 120 ரன்கள் தான் அடிக்க முடிந்தது என்றால், தாங்கள் இதனை கடினமான சூழலாக தான் பார்த்தோம் என்றும், ஆனால் 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்திருந்த போது கூட போட்டி தங்கள் பக்கம் தான் என்று எண்ணியதாகவும், இருப்பினும் வெற்றி பெற முடியாதது ஏமாற்றம் தான் என்றும் பேசியிருந்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் இந்தியாவுடனான தோல்விக்கு பிறகு, பாக் வீரர்கள் மூளையை பயன்படுத்தவில்லை என வீடியோ வெளியிட்டுள்ளார். கையில் இருந்த போட்டியை விட்டுவிட்டு, அதிலும் பந்துகளுக்கு தலா 1 ரன் அடித்தால் போதும் என்ற நிலை இருந்தும் கூட போட்டியில் வெல்ல முடியவில்லையா என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
X தளத்தில் பதிவிட்டுள்ள மற்றொரு ரசிகர், இந்த அணியை நம்புவதை இப்போதே நிறுத்தி விட்டேன், அமெரிக்கா உடன் 160 ரன்களை அடித்து வெற்றி பெற முடியவில்லை என்றாலும், 120 பந்துகளுக்கு 120 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் கூட அடிக்க முடியவில்லை என பதிவு செய்துள்ளார்.
தோல்வியை விமர்சித்து பதிவிட்டுள்ள மற்றொரு நபர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஃபிட்னஸ் டெஸ்ட் வைப்பது போல ஐ.கியூ டெஸ்ட் ஐயும் நடத்த வேண்டும். நமது அணியை விட வேறு எந்த அணியாலும் மூளையை பயன்படுத்தாமல் விளையாட முடியாது எனவும் விமர்சித்து பதிவு செய்துள்ளார்.
இதுபோல மிகவும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் பாகிஸ்தான் அணி, இந்த தொடரில் தற்போது வரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இனி வாழ்வா, சாவா போட்டிகளை எதிர்கொள்ள இருக்கும் பாகிஸ்தான் அணியின் தகுதி என்பது, மற்ற அணிகளின் வெற்றியை பொறுத்தே அமைய காத்திருக்கிறது…
நிச்சயம் இந்த விமர்சனங்களை கடந்து தங்களின் 100 சதவிகித திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் மீண்டு வர முடியும். இன்னொருபக்கம், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் உருவாக்கப்படும் எதிர்பார்ப்புக்கு உகந்தார்போல சுவாரஸ்யம் இருந்தால் மட்டுமே, இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இனி சுவாரஸ்யமாக இருக்க கூடும்…. இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட…