திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் இசைக்க திருக்கொடி ஏற்றம் நடைபெற்றது.
அப்போது தங்க கொடி மரத்திற்கு, 26 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.