கடலூர் அருகே மூதாட்டியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 46 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கையைச் சேர்ந்தவர் காசியம்மாள். இவர், பணம் எடுக்க திட்டக்குடியில் உள்ள பிரபல வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.
இயந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால், அங்கு வந்த இளைஞர் ஒருவரிடம் பணம் எடுத்து தரக் கூறியுள்ளார். அதன்படியே பணம் எடுத்துக் கொடுத்த இளைஞர், மூதாட்டியை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை திருடிச் சென்றுள்ளார்.
பின்பு, அந்த கார்ட்டை பயன்படுத்தி, பல்வேறு ஏடிஎம்களில் 46 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்து மோசடி செய்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில், மோசடி இளைஞரை திட்டக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.