நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழாவின்போது தேரில் கட்டப்பட்டிருந்த வடம் அறுந்து விழுந்ததால் இரு பக்தர்கள் காயமடைந்தனர்.
நெல்லையப்பர் கோயிலின் 518-வது ஆனி தேரோட்டம் இன்று காலை தொடங்க இருந்த நிலையில், தேரின் 4 வடங்களை முக்கிய பிரமுகர்கள் பிடித்து இழுத்தபோது மூன்று வடம் திடீரென அறுந்தது.
இதனையடுத்து உடனடியாக பக்தர்கள் சுதாரித்துக் கொண்டு தேரை நிறுத்தினர். வடம் அறுந்து விழுந்ததில் இரண்டு பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அறுந்துவிழுந்த வடம் மாற்றப்பட்டு மீண்டும் தேரோட்டம் தொடங்கியது.
நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.