கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை பராமரிப்புத் தொகையாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்ச ரூபாய் வைப்பு நிதியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதேபோல, அவர்களது வங்கிக் கணக்கில் 5 லட்ச ரூபாய் வைப்பு நிதி அளிக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்தோருக்கு உயர்கல்வி வரை படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக கூறிய அவர், கூடுதலாக 57 அரசு மருத்துவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டியை போலீசார் உடனடியாக கைது செய்து, அவரிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயத்தைக் கைப்பற்றியதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டுவரப்பட்டதாக கூறிய முதல்வர், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் சூளுரைத்தார்.