கடும் வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை சென்றவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர், ஹஜ் யாத்திரைக்குப் முறையாக பதிவு செய்யாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஹஜ் புனித யாத்திரை. இது அனைத்து இஸ்லாமியர்களும் வாழ்நாளில் ஒரு முறையாவது முடிக்க வேண்டிய இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும்.
இஸ்லாமியர்களின் புனித யாத்திரையான ஹஜ்ஜின் பெரும்பாலான சடங்குகள், இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது செய்ய வேண்டிய கடமை என்பதால், இந்த ஹஜ் யாத்திரைக்கு, ஆண்டு தோறும் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள், சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் கூடுகிறார்கள்.
ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் , சவுதியின் வெப்ப அளவு 0.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்காவிற்கு அருகிலுள்ள மினாவில் ஹஜ் யாத்திரையின் ஒரு பகுதியாக ‘பிசாசின் மீது கல்லெறிதல்’ சடங்கு நேரடி சூரியனின் கீழ் வெளியில் நடைபெறுவது வழக்கம். இந்த சடங்கு முடிந்தவுடன், கபாவை வட்டமாக சுற்றி வருவதால், அடிக்கடி கடும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பலர் இறந்து விடுகின்றனர்.
ஹஜ் யாத்திரைக்கான தேதிகள் மற்றும் நேரங்கள் இஸ்லாமிய நாட்காட்டியின்உதவியால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு சவூதி அரேபியாவின் கோடை காலத்தில் அந்த புனித நாட்கள் வந்தன. இந்த வார தொடக்கத்தில், மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் 51 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகியிருந்தாக கூறப்படுகிறது.
மெக்காவில் வீசிய அதிக வெப்பம் தாங்காமல்,1,081 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதில் 58 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ள தூதரக அதிகாரிகள் , இறந்தவர்களில் 630 பேர் ஹஜ் யாத்திரைக்கு முறையாக பதிவு செய்யாதவர்கள் என்று தெரிவித்துள்ளனர். பதிவு செய்யாமல் மெக்காவுக்கு வந்ததால், அவர்களுக்குக் குளிரூட்டப்பட்ட பகுதிகள் மற்றும் பிற வசதிகள் கிடைக்காமல் போய்விட்டதாகவும், அதனாலே, அவர்கள் அதிக சூரிய வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்குச் சென்ற இந்தியர்களில் 90 பேர் அதிக வெப்பம் காரணமாக பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 68 இந்தியர்கள் இறந்துள்ளதாக, சவூதி தூதரகம் கூறியிருந்தது.
இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி பெற்ற குர்திஸ்தான் நாட்டிலிருந்து ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்ற பலர் இறந்துள்ளதை சவூதி அரசு உறுதி படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு சுமார் 1.8 மில்லியன் இஸ்லாமியர்கள் வந்ததாகவும் , அதில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.