பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்குத் தூக்கம் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு முதல் முறையாக மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் , பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் நடக்க உள்ள 329 போட்டிகளில் 206 நாடுகளில் இருந்து 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண பல்வேறு நாடுகளிலிருந்தும் சுமார் 15 மில்லியன் ரசிகர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
20,000 இராணுவத்தினரும் , 40,000 காவலர்களும் , மற்றும் 2000 வெளிநாட்டு பாதுகாப்பு குழுவினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தமுறை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக இருக்கப்போவது கடுமையான வெப்பம் தான் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சூரியன் அதிகாலை 4 மணிக்கு உதித்து, இரவு 11 மணிக்குத்தான் மறையும்.
இதற்குப் பழக்கப்படாத இந்திய வீரர்கள் தூக்கத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதனைக் கவனத்தில் கொண்டு , இந்திய ஒலிம்பிக் சங்கம் முதல் முறையாக sleeping advisor எனப்படும் தூக்கநல ஆலோசகரை நியமித்துள்ளது.
தூக்க நல ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ள டாக்டர் மோனிகா சர்மா, இந்திய வீரர்களுடன் பாரீசுக்குச் செல்வார் என்றும், வீரர்களுக்குத் தூக்கம் தொடர்பான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்கான ஒலிம்பிக் கிராமம், தூக்கமின்மையை வளர்க்கும் சூழலாக இருக்கும் என்றும், மேலும் மனம் அழுத்தத்தை அதிகரிக்கும் பகுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்திய வீரர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை முறையாக வழங்க வேண்டியதிருக்கிறது என்று தூக்கநல ஆலோசகர் டாக்டர் மோனிகா சர்மா கூறியிருக்கிறார்.
முன்னதாக, இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்ற அபினவ் பிந்த்ரா, போட்டிக்கு முந்தைய நாளில் கடும் தூக்கமின்மைக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார். மேலும், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, போட்டி நடக்கும் காலங்களில், ஏதோ ஒரு பயத்தின் காரணமாக பெரும்பாலான இரவுகளைத் தூங்காமல் கழித்திருப்பதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆய்வில், கணக்கெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களில் கிட்டத்தட்ட 49 சதவீதம் பேர் தூக்கமின்மையால் பாதிப்படைந்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது அந்த சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு தூக்கநல ஆலோசனை அவசியமாகிறது.
இந்நிலையில் தான் இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கான தூக்க நல ஆலோசகர் நியமிக்கப் பட்டுள்ளார். சர்வதேச விளையாட்டு போட்டி வரலாற்றில், தூக்கம் தொடர்பான ஆலோசகரை இந்தியா நியமித்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.