ஜன சங்கத் தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் அவரது உருவசிலைக்கு ஜெ.பி. நட்டா மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை எதிர்த்து சியாமா பிரசாத் முகர்ஜி போராட்டம் நடத்தியதை நினைவுகூர்ந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்குச் செல்ல வேண்டுமென்றால், அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதியின்றி சென்றதால் சியாமா பிரசாத் முகர்ஜி கைது செய்யப்பட்டு ஸ்ரீநகரில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் ஜெ.பி.நட்டா கூறினார்.
மேலும், சிறையில் சியாமா பிரசாத் முகர்ஜி மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறிய அவர், அதற்கான காரணம் இன்றுவரை கேள்விக்குறியாகவே நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.