சபாநாயகர் அப்பாவு மீதான கிரிமினல் அவதூறு வழக்கை விசாரித்து 2 வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு, அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாபு முருகவேல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு நடவடிக்கையை தொடர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.