பெரம்பலூரில் லஞ்சப்புகாரில் கைதான துணை வட்டாட்சியர் நெஞ்சுவலிப்பதாக கூறி சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெற, அதன் மேலாளர் விண்ணப்பித்த நிலையில், துணை வட்டாட்சியர் பழனியப்பன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக திருமண மண்டப மேலாளர் துரைராஜ் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் லஞ்சப்பணத்தை கீழக்கரை நிர்வாக அலுவலர் நல்லுசாமியிடன் கொடுக்கும்போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.
இப்புகார் தொடர்பாக, பெரம்பலூர் துணை வட்டாட்சியர் பழனியப்பனையும் கைது செய்தனர். அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், துணை வட்டாட்சியர் பழனியப்பன் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.