சந்தேஷ்காளி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் நில அபகரிப்பிலும், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசால் சிபிஐ முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக அந்த மனுவில் மேற்கு வங்க அரசு குற்றம்சாட்டியிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க அரசின் வழக்கை விசாரணைக்கு அனுமதித்து, குற்றச்சாட்டை பதிவு செய்யும் வகையில், அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.