“தமிழகத்தில் 4 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்
இல்லாததால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், இதுதான் திமுக அரசின் சாதனையா?” என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 994 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், வேலை நேரத்தில் பெரும் பகுதியை தலைமை ஆசிரியர் பணியிலேயே கழிப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவர், கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், அதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், பிற ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.