“காவிரி விவகாரத்தில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும்” என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கக் கூடிய வகையில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது” என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “கர்நாடகாவில், அம்மாநில முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே கூட்டியது போலவே, தமிழகத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இவ்வாறு செய்வதன் மூலம், காவிரி விவகாரத்தில் தமிழகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகாவிற்கும், மற்றவர்களுக்கும் காட்ட முடியும்” என தெரிவித்துள்ளார்.
எனவே, “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்றவும், தமிழகத்தின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்கவும் முதலமைச்சர் முன்வரவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.