திமுக அரசு ஆகம விதிகளை மீறி செயல்படுவதாகவும், கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை, எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததை அமைச்சர் சேகர்பாபு மறைப்பதாக குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் பசுத்தாய் கணேசன் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருவதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் இல்லை என தங்களை கைது செய்து வருகிறார்கள். எனவும் திமுக அரசு கோவில் சொத்துகள் பற்றி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், திருவானக்காவலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து கோயில்களை மட்டும் சீரழிக்கும் திமுக அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கினர், இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
கோவையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து கோவில்களை மட்டும் திட்டமிட்டு தமிழக அரசு வஞ்சிப்பதாகவும் பிற மத வழிபாட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்துக்களுக்கு அளிப்பதில்லை என குற்றம்சாட்டினர்.
கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதே போல கோவை பொள்ளாச்சியில் உள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழகத்தில் கோயில்களில் வழிபாட்டு கட்டணத்தை அகற்ற வேண்டும்,
மற்ற மத கோயில்களுக்கு பண்டிகை காலங்களில் நிதி ஒதுக்குவது போல் இந்து கோயில்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.