மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திப் பெற்ற ஶ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் ஆடித் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அழகர் கோயிலில் அமைந்துள்ள ஶ்ரீகள்ளழகர் திருக்கோயிலில், 10 நாட்கள் நடைபெறும் ஆடி பௌர்ணமி விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 13 -ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, ஶ்ரீகள்ளழகர் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, தேரடியில் உள்ள 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் தேவியருடன் எழுந்தருளிய ஶ்ரீகள்ளழகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது, திரளான பக்தர்கள் “கோவிந்தா” கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். திருத்தேரோட்ட விழாவை பக்தர்கள் காணும் வகையில் முக்கிய இடங்களில் எல்.இ.டி திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.