மோடி 3.0 ஆட்சியின் முதலாவது நிதிநிலை அறிக்கை பாரபட்சமானது என்றும், குறிப்பாக தமிழகம் மொத்தமாக புறக்கணிக்கப் பட்டிருப்பதாக தமிழக முதல்வர் உட்பட பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். உண்மையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிறைய திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அவை என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம். ஒரு செய்தி தொகுப்பு.
மத்திய பட்ஜெட்டில், வேளாண்மை -வேலைவாய்ப்பு- உள்ளடக்க வளர்ச்சி – உற்பத்தி மற்றும் சேவைகள்- நகர்ப்புற வளர்ச்சி- ஆற்றல்- உள்கட்டமைப்பு-நவீன அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி -NexGen சீர்திருத்தங்கள் ஆகிய ஒன்பது துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு கணிசமான அளவு ரூ.1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளை பின்பற்றுவதற்கான திட்டங்கள் செயல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கி , அவர்களின் பொருட்களை சந்தை படுத்துவதற்கு உதவியாக பிராண்டிங் செய்வதற்கும் அரசு துணை நிற்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக, உயர் விளைச்சல் தரக்கூடிய மற்றும் அனைத்து பருவ நிலைகளையும் தாக்குப்பிடிக்கக் கூடிய, 109 புதிய பயிர் ரகங்களும், தோட்டக்கலை பயிர்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுடன் இணைந்து விவசாயிகளுக்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நுகர்வு மையங்களுக்கு அருகில் காய்கறி உற்பத்திக்காக பெரிய அளவிலான கிளஸ்டர்களை உருவாக்குவதற்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேகரிப்பு, சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட காய்கறி விநியோகச் சங்கிலிகளுக்கான விவசாயிகள்-உற்பத்தியாளர் அமைப்புகள், கூட்டுறவுகள் மற்றும் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிக்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்புகள், பயிர் ஆலோசனை சேவைகள் மற்றும் சந்தை விலைகள் போன்ற முக்கிய தகவல்களை வழங்கும் இந்த டிஜிட்டல் கட்டமைப்பானது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
கடலோரங்களில் உள்ள ஐந்து மாநிலங்களில் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்வளர்ப்பு உற்பத்தியை மேம்படுத்துதல், ஏற்றுமதியை இரட்டிப்பாக்குதல் மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இறால் அடைகாக்கும் கரு வளர்ப்பு மையங்களை அமைப்பதற்கு நிதியுதவி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியான நபார்டு மூலம் இறால் வளர்ப்பு, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கும், கடல்சார் தொழிலுக்கும் இவ்வளவு அறிவிப்புக்கள் உள்ளன. இதனால் தமிழக விவசாயிகளும் கடல் உணவு சார்ந்த துறையினரும் பயனடைவார்கள். எனவே தமிழகத்துக்கு இந்த பட்ஜெட்டில் ஏதும் இல்லை என்று கூறுவது தவறு என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
மேலும் பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டத்துக்கான கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் 100 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதம் வழங்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் அளவு 500 கோடி ரூபாயில் இருந்து 250 கோடிரூபாயாக குறைக்கப் பட்டிருக்கிறது. இதன்மூலம் 7,000 –க்கும் அதிகமான நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை சர்வதேச சந்தைகளில் விற்பதற்கு வசதியாக அரசு, தனியார் துறை பங்களிப்புடன் இ-வணிக ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்திய அளவில் இரண்டாவது அதிகமான சிறு குறுந் தொழில் நிறுவனங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட சிறு குறுந் தொழில்களுக்கான அறிவிப்புக்களால் தமிழகமே அதிகளவில் பயனடைய போகிறது.
தொழில் செய்ய எந்த பிணையும் இல்லாமல் கிரெடிட் கியாரண்டி திட்டம் மட்டுமின்றி ஸ்பேன்டெக்ஸ் நூல் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஜவுளித் துறையினரால் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப் படுகிறது. மேலும் தோல் பொருட்களின் உற்பத்திக்கான சுங்க வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தோல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று அத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அறிவிப்புக்களால் தமிழகத்தில் உள்ள ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் நல்ல பயனடையும் நிலையில் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கின்றனர் இந்த துறையை சேர்ந்தவர்கள்.
செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், மொபைல் பிரிண்டட் சர்க்யூட் போர்டு உள்ளிட்டவை மீதான அடிப்படை சுங்கவரி 20 சதவீதத்தில் 15 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் செல்போன் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பும் பெரும் பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மின்சார வாகன உற்பத்தி துறை பெரும் பலனை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்புக்களாலும் தமிழகம் தான் அதிகமான பயன் பெறப் போகிறது. உண்மை இப்படியிருக்க , பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறுவது முழுபொய்யாகும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்.