அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தேசிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு உண்டு என்றும், இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு முழு அரசியலமைப்பு உரிமைகளை கொண்ட அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் என்றும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது , தேசிய தேர்வு முகமை போன்ற நிறுவனங்களில் தலைவராக பணியமர்த்துவதற்கான தகுதி ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு தான் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்ஜி லால் சுமன் கருத்து தெரிவித்தார்.
உடனடியாக இதனை ஆட்சேபித்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இதனை அரசியலாக்கக் கூடாது என்று இந்த அவையில் பலமுறை தான் கூறியிருப்பதாகவும், உறுப்பினர் விதிகளை மீறியதோடு இந்திய அரசியலமைப்பையே காலில் போட்டு மிதித்திருப்பதாகவும் கடுமையாக கூறினார்.
நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பை தனிமைப்படுத்த தன்னால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவைத் தலைவர், ஒரு உலகளாவிய சிந்தனைக் குழுவான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பகுதியின் கீழ், தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று கூறினார்.
மேலும், குற்றம்சாட்ட முடியாத நற்சான்றிதழ்களைக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ், நாட்டுக்கு தன்னலமின்றி சேவை செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர்களை உள்ளடக்கியதாக உள்ளது என்று குறிப்பிட்ட ஜெகதீப் தன்கர், மேலும் நாட்டின் நலன், நாட்டின் கலாச்சாரம் ஆகியவற்றிற்காகப் பங்காற்றி வருவதாகவும், அத்தகைய அமைப்பின் உறுப்பினர்களை தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் , இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதை கவனித்ததாக தெரிவித்த அவைத்தலைவர், இது ஒரு மோசமான திட்டமிடல் என்றும் , நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு மோசமான வழிமுறை என்று கூறினார்.
இப்படி மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் செயல்படுபவர்கள், நாட்டுக்கும், இந்திய அரசியல் அமைப்புக்கும் பெருந் தீங்கை செய்கிறார்கள் என்றும் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.