இருசக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தயவுசெய்து ஹெல்மெட் அணிய வேண்டும் என நடிகர் பிரசாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் பிரசாந்த், நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த், அந்தகன் திரைப்படம் மக்களிடம் சிறப்பாக சென்றடையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படம் என்று மக்கள் பார்ப்பதில்லை என்றும், திரைக்கதை சிறப்பாக உள்ள படங்களை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர் எனவும் கூறினார்.
மேலும், காலத்திற்கு ஏற்ப ஓடிடி தளங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். தமிழகம் முழுவதும் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறேன் எனக்கூறிய அவர், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
நடிகர் விஜய் அரசியலை தேர்வு செய்திருப்பது நல்ல விஷயம் என குறிப்பிட்ட நடிகர் பிரசாந்த், யார் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு துணையாக நிற்பேன் என தெரிவித்தார்.