இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தின் சம்பா மற்றும் ராம்பூர் மாவட்டங்களில் மேக வெடிப்பு காரணமாக அதீத கனமழை பெய்தது. வரலாறு காணாத கனமழையால் பல கிராமங்கள் அடித்து செல்லப்பட்டன.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், 49 பேர் காணாமல்போனதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளும், வாகனங்களும் மண்ணில் புதைந்துள்ள நிலையில், ராம்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேகவெடிப்பு காரணமாக பெய்த அதீத கனமழையில் தங்கள் உறவினர்களின் சிலர் உயிரிழந்ததாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இமாச்சலப்பிரதேசம் பார்வதி ஆற்றில் உள்ள மலானா அணை உடைந்ததால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கோயில்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில் அணை உடைந்து பாதிக்கப்பட்ட இடங்களின் ட்ரோன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.