திருப்பூரில் வெளிமாநிலத் தூய்மை பணியாளர்கள் ஒரு மாதமாக கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், திருப்பூரில் பொதுக்கழிப்பறைகளை பராமரிக்க அழைத்துவரப்பட்ட தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர்களுக்கு சத்தான உணவு, உறைவிடம் ஆகியவற்றை உறுதிசெய்வது தமிழக அரசு மற்றும் மாநகராட்சியின் கடமை எனவும் கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் மிக அவலமான சூழலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் காணொலி வெளியான பிறகு பழியை ஒப்பந்ததாரர் மீது போட்டுவிட்டு அரசும், மாநகராட்சியும் தப்ப முயல்வது கண்டனத்துக்குறியது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதில் இருந்தே மாநகராட்சி முற்றிலுமாக செயலிழந்து விட்டதை அறிய முடிவதாகவும் கூறியுள்ளார்.
தூய்மை தொழிலாளர்களை கழிப்பறைக்குள் தங்க வைத்திருப்பதா திமுகவின் சமூக நீதி என விமர்சித்துள்ள அன்புமணி ராமதாஸ், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.