பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் நூலிழையில் பதக்கங்களை தவறவிட்ட இந்திய வீரர்கள், பெரும்பாலான போட்டிகளில் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர். இது குறித்து செய்தி தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் 16 நாட்கள் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரை பாரிஸ் ஒலிம்பிக் பயணத்தை 6 பதக்கங்களுடன் 71 வது இடத்தில் நிறைவு செய்தது.
இருப்பினும் இந்திய வீரர்களின் கவனம் ஈர்க்கும் வகையிலான திறனால் இந்த ஒலிம்பிக் தொடர் பல ஏமாற்றங்களை கண்டாலும் மெய் சிலிர்க்கச் செய்தது என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட 10 விளையாட்டுகளில் இந்தியாவானது பதக்கங்களை தவறவிட்டு இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாமல் போனாலும், பாராட்டத்தக்கது என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்படி நான்காவது இடம் பிடித்து பதக்கங்களை தவறவிட்ட வீரர்கள் குறித்து காண்போம்.
வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அங்கிதா பாகத், தீரஜ் போம்மதேவரா இணை அமெரிக்கா உடனான வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியை தழுவியது.
பெரிதும் எதிர்பார்க்க பட்ட இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் லக்ஷ்யா சென் அரையிறுதிப் போட்டியில் டென்மார்க் வீரர் அலெக்ஸன் உடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் வெண்கலப் பதக்கத்கிற்கான போட்டியில் விளையாடினார் லக்ஷ்யா சென். ஆனால் மலேசிய வீரர் லீ ஜி ஜியா உடன் மோதிய லக்ஷ்யா சென் அதிலும் தோல்வியுற்று 4-வது இடம் பிடித்து வெளியேறினார்.
அடுத்ததாக குத்துச்சண்டை வீரர் நிஷாந்த் தேவ், 71 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு காலிறுதிப் போட்டியில் மெக்சிகோ வீரரிடம் தோல்வியடைந்து வெளியேறினார். அதே போல டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கேன், காலிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அர்ஜுன் பபுதா போட்டியிட்டு, 4 வது இடமும், துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ்வரி சவுகான், அனஞ்சீத் சிங் நருகா இணை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடி நான்காவது இடமும் பிடித்தனர்.
அதே சமயம் 10 மீட்டர் ஏர் ரைபில் போட்டியில் மகளிர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று, ஒரே விளையாட்டில் இரண்டு பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனை படைத்த மனு பாக்கர், 25 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் நூலிழையில் பதக்கத்தை நழுவ விட்டார்.
இதனால் 4 வது இடம் பிடித்தார் மனு பாக்கர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கு வீராங்கனை மீராபாய் சானு, 199 கிலோ எடை தூக்கி, வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை நழுவ விட்டு, 4வது இடம் பிடித்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.
இத்தனை ஏமாற்றங்களையும் தாண்டி, மகளிர் 50 கிலோ எடை பிரிவில் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டி வரை சென்ற வினேஷ் போகத், தாம் போட்டியிட்ட பிரிவில் இருந்து வெறும் 100 கிராம் எடை கூடியதாக கூறி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்தியாவுக்கு கிடைக்க இருந்த தங்கம் அல்லது வெள்ளி ஆகிய பதக்கங்களும் தவறின.
இவ்வாறாக இந்தியாவின் பங்களிப்பு சிறப்பான ஒரு ஒலிம்பிக் தொடராக இந்தியாவுக்கு அமைத்துக் கொடுத்துள்ளது. நான்காவது இடமெல்லாம் கடந்து பார்த்தால் இந்தியாவின் நம்பிக்கையான இணையாக வலம் வந்த பேட்மிண்டன் நட்சத்திரங்கள் சாத்விக் சாய் மற்றும் சீரக் செட்டி இணை, தகுதிச் சுற்று போட்டிகளில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியதும், டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் சரத் கமல் முதல் சுற்றிலேயே வெளியேறியதும் இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த ஒலிம்பிக் தொடர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடுத்து நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.