வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பாக மத்திய அரசு அமைத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு தலைவராக பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் நியமிக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து, சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கூட்டுக்குழுவில் மக்களவையிலிருந்து எம்.பி.க்கள் ஜகதாம்பிகா பால், ஆ. ராசா, நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூர்யா, அரவிந்த் சாவந்த், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல மாநிலங்களவையிலிருந்து பிரிஜ் லால், ராதா மோகன் தாஸ் அகர்வால், விஜயசாய் ரெட்டி, சஞ்சய் சிங் உள்ளிட்ட 10 எம்பிக்கள் கூட்டுக்குழுவில் இடம்பெற்றனர்.
இந்நிலையில், கூட்டுக்குழு தலைவராக பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் நியமிக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.