விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பள்ளி மாணவனின் கழுத்தை கத்தியால் கிழித்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் பூதேரி பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ்குமார் என்பவர், கடந்த 12-ம் தேதி இரவு திண்டிவனம் ரயில்வே பாலம் அருகே வந்தபோது வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது சாலையை சரியாக அமைக்காத அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அங்கிருந்த திமுக நிர்வாகி அபி என்பவர், மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த அபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமாரின் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த புஷ்பராஜ் என்பவரையும், அபி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.
பின்னர் படுகாயமடைந்த மாணவர் சந்தோஷ்குமார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திமுக நிர்வாகி அபி உள்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.