எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பதவிக்கு கூடுதல் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், உட்கட்சி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் நாளை நடைபெறும் அதிமுக செயற்குழுவில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவிய அதிமுக, ஒரு சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்திருக்கிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய எடப்பாடி பழனிசாமி நடத்திய தொகுதி வாரியிலான ஆய்வுக்கூட்டங்களில், வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி, மூத்த அமைச்சர்கள் காட்டும் சுணக்கம், தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பின்மை என அடுக்கடுக்கான புகார்களை கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைத்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள முடியும் என சில நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசியதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரை தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இத்தகையை பரபரப்பான சூழலில் வெள்ளிக்கிழமை கூடும் செயற்குழுவில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், மின் கட்டணம், பல்வேறு வரிகள் உயர்வு என திமுகவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோடு அதிமுகவின் சட்ட விதிகளில் சில திருத்தங்களையும் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து யாரும் குரல் எழுப்பக் கூடாது என மாவட்டச் செயலாளர்கள் வாயிலாக அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்தல் பணிகளை எளிதாக்கும் வகையிலும், அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையிலும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 85லிருந்து 100 ஆக உயர்த்துவது தொடர்பாகவும் இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளன.
அண்மையில் வழக்கு ஒன்றில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளர் என குறிப்பிடக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், அவருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திமுகவுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்வதோடு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான பல்வேறு முடிவுகள் எடுக்கப்படவிருக்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.