திமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாமகேஸ்வரி என்ற பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன் என தெரிவித்துள்ளார்.
பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் தான் உறுதி செய்திருக்க வேண்டும் எனவும்
ஆனால் திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என தெரிவித்துள்ளார்.
பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்ற நெறிமுறை உள்ள இடத்தில் ஊழியர்களுக்கான பாதுகாப்பை திமுக அரசு செய்துதரவில்லை என குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி,
ஊழியர்களுக்கான பாதுகாப்பை திமுக அரசு செய்து தராததன் விளைவாக தான் ஆவின் பணியாளர் உமாமகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த உமாமகேஸ்வரியின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.