முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் அவரது இல்லத்தில் எங்கள் வீரவணக்கமும் மரியாதையும் செலுத்தி, திருமதி பத்மநாபன் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தோம்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அவர் பல பல படைப்பிரிவுகளுக்கு தலைமை வகித்தார். காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், முக்கிய பங்கு வகித்தார்.
டிசம்பர் 2001 முதல் ஜூன் 2002 வரையிலான இந்திய-பாகிஸ்தான் மோதலின் முக்கியமான காலகட்டத்தில் இந்திய இராணுவத்தை வழிநடத்தியதன் மூலம் அவர் தனது வீரம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார்.
தமிழினம் தனது மண்ணின் மகன் தளபதி சுந்தரராஜன் பத்மநாபனை நினைத்து பெருமை கொள்கிறது. 2000 முதல் 2002 வரை ராணுவத் தளபதியாக இருந்த அவரது பதவிக்காலம், இந்தியாவின் பாதுகாப்பிற்கு முன்மாதிரியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது என அண்ணாமலை கூறியுள்ளார்.