நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 43 பேர் பேருந்தில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.
தனாஹன் மாவட்டத்தில் உள்ள ஆற்றின் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 25 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.