பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சக மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
விசாரணையின்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மருத்துவர்களின் போராட்டத்தால் சிகிச்சை வசதியின்றி 23 பேர் உயிரிழந்ததாகவும், 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அவதியடைந்ததாகவும் வாதிட்டார்.
இதைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தினார்.
இதை ஏற்க மறுத்தால், மருத்துவர்கள் மீது மேற்கு வங்க அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என கூறிய அவர், வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டார்.