மணிப்பூரில் நியாயமான விலையில் பொருட்களை வழங்க மத்திய அரசு சார்பில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூரில் இன வன்முறையைால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
கடந்த 1ஆம் தேதி முதல் மணிப்பூரின் பிஷ்னுபூர், இம்பால் மேற்கு, கிழக்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மணிப்பூர் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள அவர், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மணிப்பூரில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
8 மையங்கள் மலைப் பகுதிகளிலும், மீதமுள்ள 8 மையங்கள் பள்ளத்தாக்கு பகுதிகளிலும் திறக்கப்படும் என கூறியுள்ளார். மணிப்பூரில் மத்திய அரசு சார்பில் ஏற்கனவே 21 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.