இந்தியாவின் முதல் நமோ மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களுக்கும் இந்த ரயில் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
அதிவேக ரயிலின் புதிய வடிவமான வந்தே மெட்ரோ, ‘நமோ பாரத் விரைவு ரயில்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிராந்திய நகரங்களை இணைக்கும் நோக்கத்தில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்கு மாற்றாக புதிய அதிவேக ரயிலை குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.
மக்கள் அதிகம் கூடும் நகரங்களுக்கு இடையே இந்த புதிய இரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், இந்த அதிவேக நமோ பாரத் ரயில் மூலம் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு விரைவாக செல்லமுடியும் என்றும் கூறியுள்ளது.
1150 பயணிகள் அமர்ந்து கொண்டும் 2,058 பேர் நின்று கொண்டும் பயணம் செய்யும் வகையில், நமோ பாரத் ரயிலில் 12 பேட்டிகள் உள்ளன. முழு பெட்டிகளும் குளிர் சாதன வசதி உள்ள இந்த ரயிலில் பயணிக்க 455 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புஜ் முதல் அகமதாபாத் இடையிலான 359 கிலோ மீட்டர் தூரத்தை இந்த நமோ பாரத் ரயில் ஐந்தே முக்கால் மணி நேரத்தில் கடக்கும்.
பொதுவாக 100, 200 அல்லது 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களுக்குச் சென்று வர மக்களுக்கு குறைந்த அளவிலான போக்குவரத்து வசதிகளே உள்ளன. பெரும்பாலும் ரயிலில் சென்றாலும், முக்கிய நகரங்களின் புறநகர் பிரிவுகளில் இயங்கும் மின்சார ரயில்கள் மட்டுமே உள்ளன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறு ஊர்களில் நிற்காது என்பதால் , மக்களுக்குப் போக்குவரத்து சிரமமாகவே உள்ளது.
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவித்தாலும், பயணிகள் வேகமான மற்றும் வசதியான பயண பயணத்தையே விரும்புகிறார்கள்.
பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு கடந்தாண்டு டெல்லி மற்றும் மீரட் இடையே தொடங்கப்பட்டது. இந்த புதிய சேவை டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் இடையே பயணிப்பவர்களுக்கு பயணத்தை எளிதாக்கிறது என்றாலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
அதாவது, டெல்லி மெட்ரோவைப் பொறுத்தவரை, ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கான கட்டுமான செலவு, 200 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரை ஆகிறது என்றால், RRTS-க்கு ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 400 கோடி ரூபாய் ஆகிறது. மேலும் RRTS திட்டங்களை உருவாக்கும் நேரமும் அதிகமாகிறது.
இந்திய ரயில்வேயில் சுமார் 62,000 கிலோமீட்டர் நீள அகலப்பாதை (BG) நெட்வொர்க் உள்ளது. இது நாடு முழுவதும் நிலையங்களையும் கொண்டுள்ளது. எனவே வேகமான, நவீன மற்றும் வசதியான ரயில் சேவையை இயக்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு ஏற்கெனவே தயாராக உள்ளது. புதிய ரயில் பெட்டிகளை மட்டுமே உருவாக்க வேண்டும் . அதற்கான முதலீடு இருந்தால் மட்டும் போதுமானது.
ஏற்கனவே உள்ள இருப்பு பாதைகளையும் மற்றும் ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்களையும் வந்தே மெட்ரோ ரயில்களுக்காக எளிதில் செலவில்லாமல் பயன்படுத்தக் கொள்ள முடிகிறது.
மேலும், வந்தே மெட்ரோ ரயில்கள் முழுமையாக குளிரூட்டப்பட்ட பயணங்களை வழங்குகின்றன. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த இரயில்களில், கவச் பொருத்தப்பட்டிருப்பதால் பயணப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
குளிரூட்டப்பட்டப் பெட்டிகள், குஷன் இருக்கைகள் , நவீன உள் அலங்கார வடிவமைப்புக்கள், விபத்துக்களைத் தவிர்க்கும் கவச் தொழில் நுட்பம், தீவிபத்து எச்சரிக்கை கருவிகள், தீயை அணைக்கும் வசதிகள், அவசர கால விளக்குகள், இந்த நமோ பாரத் இரயிலில் பொருத்தப் பட்டுள்ளன.
மேலும்,மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்த ஏதுவாக கழிப்பறை வசதிகள், மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி, மற்றும் அதற்கான இணைப்பு கருவிகள், சிறந்த உணவு வசதி,கண்காணிப்பு கேமிரா, ஆபத்து காலங்களில் ஓட்டுனருடன் பேசும் வசதி என நவீன வசதிகள் பல இந்த நமோ பாரத் ரயிலில் உள்ளன.
அமிர்த் பாரத் ,வந்தே பாரத் ,நமோ பாரத் ஆகிய மூன்றும் இந்திய ரயில்வே துறையின் நவீனமயமாக்கலின் அடையாளமாக விளங்குகின்றன.