ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற இளைஞரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மீட்டு, அவரது இல்லத்தில் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்குத் திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
முத்துக்குமார் ஒப்பந்த அடிப்படையில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று வரும் நிலையில், கடந்த ஜீலை மாதம் 21ஆம் தேதி தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அதன் பிறகு முத்துக்குமார் குறித்து எந்த தகவலும் தெரியாததால் அவரை மீட்டுத் தரக்கோரி அவரது மனைவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதையடுத்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில் தாய்லந்தில் இருந்து மீட்கப்பட்ட முத்துக்குமாரை அவரது வீட்டில் ஒப்படைப்பதற்காக சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகனை, கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் இளைஞரை குடும்பத்தினருடன் ஒப்படைத்த மத்திய அமைச்சருக்கு இளைஞரின் குடும்பத்தினரும் , கிராம மக்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.