மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்த நிலையில், கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷா என்பவருடன், ஜெயம் ரவி தொடர்பில் இருப்பதாக வெளியான தகவல்களும் பேசு பொருளாகின. இந்த நிலையில், தமக்கும், கெனிஷாவிற்கும் இடையே எந்த தவறான தொடர்பும் இல்லை என ஜெயம் ரவி விளக்கமளித்துள்ளார்.
பாடகி கெனிஷா பற்றி ஜெயம் ரவி உயர்வாக பேசிய காட்சிகள் தான் இவை…. பாடகியாக மட்டுமின்றி, ஒரு நல்ல மனோதத்துவ நிபுணராக பல நூறு பேரை குணமடையச் செய்திருக்கிறார் கெனிஷா என்றும் குறிப்பிட்டார் ஜெயம் ரவி….
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனி இடத்தை பிடித்துள்ள ஜெயம் ரவியின் சினிமா கெரியர், பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு முன்னேற்றம் அடைந்தது என்று தான் கூற வேண்டும்.
தனக்கான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ஜெயம் ரவி மிகத் தெளிவாக இருப்பவர் என்றும் திரைத்துறையினர் கூறுகின்றனர். அழகான மனைவி ஆர்த்தி, அன்பான மகன்கள் என எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருப்பது போல் தோன்றினாலும், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
ஆனால், தம்மிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தனித்தே எடுத்ததாக ஆர்த்தியும் பதில் அறிக்கை வெளியிட்டதால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் உச்சகட்டத்தில் இருப்பதாகவும் பேசப்பட்டது. இது ஒருபுறம் என்றால், ஜெயம் ரவி அடிக்கடி கோவா சென்று அங்குள்ள பாடகி கெனிஷா என்பவருடன் ஒன்றாக நேரத்தை கழிக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகின.
ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிருப்தியில் இருந்த ஜெயம் ரவி, சென்னையில் நடந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் பாடகி கெனிஷாவை சந்தித்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு நாளடைவில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில் தான், பாடகி கெனிஷாவை தன்னுடன் தொடர்புபடுத்தி பேசுவது குறித்து ஜெயம் ரவி சென்னையில் விளக்கமளித்தார். நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் கதாநாயகன் ஜெயம் ரவி, கதாநாயகி பிரியங்கா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய ஜெயம் ரவி, மக்களை மகிழ்விப்பதே தனது பணி என்று குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவை தன்னுடன் தவறான முறையில் தொடர்புபடுத்தி பேசுவது மிகவும் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக ஜெயம் ரவி- கெனிஷா பற்றி சமூக வலைதளங்களில் பல விதமாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி பேசியிருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.