அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் நபர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் அசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.
அரசு துறைகளில் தற்காலிகமாக பணியாற்றும் நபர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 4 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு முடிவெடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.