அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்ததற்காக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி டோஹனா பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், சீக்கியர்களை அவமதிப்பதை ராகுல் காந்தி வாடிக்கையாக கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், குழந்தைகள், தாய்மார்களைக்கூட காங்கிரஸ் கட்சியினர் விட்டுவைக்கவில்லை என்றும் அமித்ஷா ஆவேசமாக பேசினார்.
அப்போது ஆட்சியிலிருந்த ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, பெரிய மரம் சரிந்தால் பூமி அதிர்வது இயல்புதானே என உவமையுடன் கருத்து தெரிவித்ததையும் அமித்ஷா சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியாக சீக்கியர்களை அவமதித்ததற்காக ராகுல் காந்தி தலைப்பாகை அணிந்து குருத்வாரா சென்று சீக்கிய சகோதரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென அமித்ஷா வலியுறுத்தினார்.