தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமை தாங்கினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் திமுக அரசை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வளர்மதி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை பலமுறை எச்சரித்தும் முதலமைச்சர் அதுபற்றி கவலைகொள்வதில்லை என தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானால் தான் பெண்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.