மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ரேவாரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஹரியானாவில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த அமித் ஷா, அவருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தோ அல்லது காரீஃப், ராபி பருவ பயிர்கள் குறித்தோ தெரியுமா என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து ஹரியானா மாநிலம் அம்பாலாவில் தேர்தல் பிரசாரம் செய்த அமித் ஷா, ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் விவசாயிகளுக்கான நிதியுதவி 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 5 லட்ச ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும் நிலையில், இந்தத் தொகை 10 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அமித் ஷா வாக்குறுதியளித்தார்.