ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டமடைந்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் புதிய அதிபர் பொறுப்பேற்ற 5 நாட்களில் 2 படகுகளுடன் 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பிற மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து கைதான மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.