ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில் சட்டத்திருத்தங்கள் உள்ளிட்டவை தொடர்பாக வரும் நாடாளுமன்ற தொடரிலேயே 3 மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
மக்களவை, சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குழுவின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில், இதுதொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதன்படி, மூன்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் திருத்தம், புதிதாக 12 துணைப் பிரிவுகள் சேர்ப்பது, யூனியன் பிரதேசங்கள் தொடர்பான மூன்று சட்டங்களில் மாற்றம் என, மொத்தம் 18 திருத்தங்கள் செய்ய வேண்டும்.
இந்நிலையில், இந்த தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக 3 மசோதாக்களை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது
முதலாவதாக, மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கான பதவிக் காலங்கள் தொடர்பான ஒரு நிர்ணயிக்கப்பட்ட தேதியை உருவாக்குவது மற்றும் இவற்றின் பதவிக் காலங்களில் மாற்றம் செய்வது.
அடுத்ததாக, மக்களவை, சட்டசபைகளுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 – ஏ என்ற துணைப் பிரிவை புதிதாக உருவாக்குவது மற்றும்
மக்களவை, சட்டசபைகளுடன் புதுச்சேரி, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதற்கு ஏதுவாக சட்ட திருத்த மசோதக்களை வரும் நாடாளுமன்ற தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.