நாகையில் நடுக்கடலில் மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தை தொடர்ந்து செருதூர் பகுதி மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் செருதூர் பகுதியை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த அக்கரைப்பேட்டையை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், செருதூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செருதூர் மீனவர்கள் 3 பேர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பேட்டை மற்றும் செருதூர் மீனவர்கள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து செருதூர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 300க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.