திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டதாக பொதுவெளியில் தெரிவித்தது ஏன் என ஆந்திர முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மையை ஆராய வலியுறுத்தி ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருப்பதி கோயிலுக்கு எத்தனை ஒப்பந்ததாரர்கள் நெய் விற்பனை செய்தனர்?
பிரசாத லட்டுவில் அசுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், சிறப்பு விசாரணைக்கு ஆணையிட்டுள்ள ஆந்திர முதலமைச்சர், முடிவுகள் வருவதற்கு முன் பொதுவெளியில் பேசியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியலில் இருந்து தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தனர்.