மஹாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை நாட்களில் பொதுமக்கள் புனித நீர்நிலைகளில் நீராடி தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அந்த வகையில், மஹாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலையிலேயே பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதனை தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பாபநாசம் தாமிரபரணி படித்துறை, அய்யா கோயில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றால அருவிகளில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அதிகாலை முதலே அருவிக்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பவானி நதி மாதேஸ்வரன் மலைக்கோயில் அமைந்துள்ள நந்தவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.