ஜே இ இ தேர்வில் தேர்ச்சி பெற்றும், குறிப்பிட்ட நேரத்துக்குள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், IIT சேர்க்கை வாய்ப்பை இழந்த தலித் மாணவருக்கு, அதே IIT-யில் இடம் வழங்குமாறு ,உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தனித்துவ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சிறப்பு மிக்க உத்தரவை தலைமை நீதிபதி சந்திரசூட் பிறப்பித்துள்ளார். இதன் பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரின் கட்டௌலியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகனான அதுல்குமாருக்கு, ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பது தான் இலக்காக இருந்தது. அதற்காக, தீவிர பயிற்சி எடுத்து ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வையும் எழுதினார் அதுல்குமார்.
தனது பாடப் பிரிவில் மேம்பட்ட JEE தேர்வில், அதுல்குமார், தேசிய அளவில் 1,455 ரேங்க் பெற்றிருந்தார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் நான்காண்டு இளங்கலை தொழில்நுட்ப படிப்பிற்காக ஐஐடி தன்பாத்தில் அவருக்கு இடம் கிடைத்தது.
சேர்க்கை கட்டணமான 17 ஆயிரத்து 500 ரூபாயை மொத்தமாக திரட்டுவது என்பது பட்டியலினத்தை சேர்ந்த அதுல்குமார் குடும்பத்தினருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எப்படியோ, கிராம மக்களிடம் இருந்தும், தெரிந்தவர்களிடம் இருந்தும் பணம் வாங்கியிருக்கிறார். ஆனாலும், கடைசி நாளான ஜூன் 24ம் தேதி மாலை 5 மணிக்கு பணத்தைச் செலுத்துவதற்குள் IIT இணையத் தளம் மூடப்பட்டு விட்டது.
எவ்வளவு முயன்றும் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. எனினும், தனது கல்விக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விவகாரத்தை, அதுல் குமார், எஸ்.சி/எஸ்.டி கமிஷன் மற்றும் ஜார்க்கண்ட் சட்ட சேவைகள் ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறார். மூன்று மாத காலம் கடந்த பிறகும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி, அதுல் குமார், நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் .
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனுதாரர் தனது சேர்க்கைக்கான எல்லாவற்றையும் செய்துள்ளதாகவும், இதை இப்படியே விட்டுவிடக் கூடாது என்றும், தன்பாத் ஐஐடியில் குறிப்பிட்ட நேரத்தில் கட்டணம் செலுத்தியிருந்தால் எந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டிருப்போரோ, அதே தொகுப்பில் மாணவர் அதுல்குமாரை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும், தலித் மாணவர் அதுல் குமாருக்கு ஆல் தி பெஸ்ட் என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய அரசியலமைப்பின் 142 வது பிரிவு, நீதியின் நலனுக்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தியே, தன்பாத் ஐஐடியில் பிடெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் அதுல்குமாரைச் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஐஐடியில் தனது இடத்தை மீட்ட தலித் மாணவர் அதுல் குமார், எலெக்ட்ரிகல் துறையில் வெற்றிபெற கடுமையாக உழைக்கப் போவதாகவும், தடம்புரண்ட ரயில் மீண்டும் தண்டவாளத்தை அடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதுல் குமாரின் இரு சகோதரர்களும் ஐஐடி காரக்பூர் மற்றும் என்ஐடி ஹமிர்பூரில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.