திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் நவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதில், கலந்துகொள்ளும் வகையில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்,குமாரகோயில் முருகன்,பத்பநாதபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சாமி விக்கிரகங்கள் சுசீந்திரம் கோயிலில் இருந்து யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றன. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் குழித்துறை பகுதிக்கு வந்ததடைந்தது.
தொடர்ந்து குழித்துறை பகுதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதிக்கு மன்னரின் உடைவாள் மற்றும் விக்கிரகங்கள் வந்தடைந்தன.
அங்கு இரு மாநில போலீசாரின் அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் நாகாலாந்து ஆளுநர். இல.கணேசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.